பாவம் செய்ய
மனிதனுக்கு கற்றுக்கொடுக்க
வேண்டியதில்லை.
மீன் குஞ்சுக்கு
நீந்த கற்றுக்கொடுக்க
வேண்டுமா என்ன?
அப்போது
உலகின் மொத்த மக்கள் தொகையே
நாலு பேர்தான்.
ஆனால்
அப்போதே ஒரு கொலை
நிகழ்ந்துவிட்டது.
ஆதாம் ஏவாள் பெற்றோர்
காயீன், ஆபேல் பிள்ளைகள்.
இந்த சின்னஞ்சிறிய
முதல் குடும்பத்தில்தான்
முதல் பொறாமையும்
முதல் கொலையும்
தோன்றின.
காயீன் மூத்தவன்
ஆபேல் இளையவன்
அண்ணன்
விவசாயி
தம்பி
மேய்ப்பன்.
ஆபேல்
தேவனுக்கு பயந்தவன்
நன்னம்பிக்கையாளன்.
ஆகவே அவன்
ஆகச் சிறந்த ஆட்டுக்குட்டியை
காணிக்கை செலுத்தினான்.
காயீன்
தேவ பயமற்றவன்
தன்னம்பிக்கையாளன்.
ஆகவே
நிலத்தின் கனிகளை
காணிக்கை செலுத்தினான்.
ஆதாமுக்காக
அவன் நிர்வாணத்தை மறைக்க
ஒரு ஆட்டுக்குட்டியை அடித்து
அதன் தோலினால் ஆடை நெய்து
உடுத்துவித்து
அழகு பார்த்தார் தேவன்.
இரத்தம் சிந்துதல் இல்லாமல்
பாவ மன்னிப்பு இல்லை என்பது
தேவ சட்டம்.
கிறிஸ்துவின் சிலுவை பலிக்கு
முன்னடையாளமாக
இச்சட்டத்தை உருவாக்கியது பரலோகம்.
தன் அப்பாவிடமிருந்து இந்த பாடங்களை
கற்றறிந்து அதை
தன் மனதில் வைத்திருந்த
ஆபேல்
தேவ சித்தப்படி
பரலோக திட்டப்படி
உன்னதமான காணிக்கையை
செலுத்தினான்.
தன் சுய சித்தப்படி
தன் சுய திட்டத்தின் படி
காணிக்கை செலுத்தினான்
காயீன்.
ஆகவே தேவன்
ஆபேலின் காணிக்கையை
அங்கீகரித்தார்
காயீனின் காணிக்கையை
நிராகரித்தார்.
பொறாமைத் தீ
மூண்டது
காயீனின் உள்ளத்தில்.
அத்தீயின் ஜூவாலை
ஆபேலை சுட்டெரித்தது.
இரத்தத்திற்கு
பேசும் வல்லமை உண்டு.
ஆபேலின் இரத்தம்
பழிவாங்குவதற்காக பேசியது.
கிறிஸ்துவின் இரத்தம்
பரிந்துபேசுவதற்காக பேசுகிறது.
உலகில்
முதலில் மரித்தவனும்
முதலில் கொலையுண்டவனுமான
ஆபேல்தான்
முதன்முதலில்
தேவனுக்கென்று
பிரியமான காணிக்கை
செலுத்தின பரிசுத்தவான் ஆனான்.
ஆபேல் தனக்காக
காணிக்கை செலுத்தினான்
கிறிஸ்து தன்னையே
காணிக்கையாக செலுத்தினார்.
எனவே
ஆபேலின் காணிக்கையை காட்டிலும்
உன்னத காணிக்கையை செலுத்தின 'கிறிஸ்து'
'உலக இரட்சகர்' ஆனார்!
✅
- Bro. Durai Daniel
@aarudhaltv